தன் வாழ்க்கை பயணத்தை நினைவு படுத்திய மெய்யழகன் திரைப்படம்
Meiyazhagan movie review that recalls his journey அண்மையில் ஓர் திரைப்படம் பார்தேன். வீரவசனங்கள் இல்லாமல் இரைச்சல் இல்லாமல். உறவுகளின் மனங்களை அதன் வலிகளை ஒரு அழகான கவிதைபோல பதிவுசெய்திருந்த அந்த திரைப்படம்.. மெய்யழகன்.
அதில் எனக்கு மிகவும் பிடித்த சைக்கிள் ஒரு முக்கிய கதாபாத்திரம். ஒருவன் வாழ்வில் பொருளீட்டுவதற்க்கும் அவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்க்கும் சைக்கிள் எப்படி உதவியது என விபரிக்கும்போது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தது.
சிறு வயது கார்த்தியும் என் போன்ற மன நிலையில் தான் வளர்ந்திருக்கின்றான் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
என் வயது சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடும் போது. எனக்கு மட்டும் எப்போது விடியும் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டி போகவேண்டும் என மனம் துள்ளும் அப்படி நான் சைக்கிளில் வரனி வரை சென்று வந்தது அப்போது எனக்கு மிகப்பெரிய சாதனையாகவே இருந்தது.
Read more – தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் ஆளப்போகும் திரிஷா! |
எனக்கும் சைக்கிளுக்குமான முதல் பந்தம் அது இப்போதும் மனதில் நிழலாடுகின்றது. அப்போது எனது தந்தை திருகோணமலை யில் கடை வைத்திருந்தார்.
ஒரு மாலை நேரம் கடற்படை அதிகாரி ஒருவர் மூன்று சில்லு சைக்கிள் ஒன்றை கையில் தூக்கியவண்ணம் “இதை நாளை வரை உங்கள் கடையில் வைத்திருக்கமுடியுமா” என கேட்டார் தந்தையும் சம்மதித்தார்.
அந்த சைக்கிளை அவ்வளவு ஆச்சர்யமாக பார்த்தேன். இரண்டு பக்கமும் அழகிய குஞ்சம் தூங்க சிவப்புக்கலரில் குதிரைபோல நின்ற அந்த சைக்கிளில் ஏறி அமர்ந்தது இன்று வரை மனதில் நிழல்படமாகிவிட்டது.
இரவு முழுதும் கடைக்குள் அதை சுற்றி சுற்றி ஓட்டினேன் மறு நாள் அந்த அதிகாரி சைக்கிளை எடுக்க வந்தபோது என்னால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.
சைக்கிளை இருகபற்றியபடி கத்தினேன் அந்த அதிகாரிக்கும் சங்கடமாக இருந்தது.. ஒருவாறு சைக்கிளை என்னிடம் இருந்து பிரித்துச்சென்றபின்னும் என் அழுகை நிற்கவில்லை.
அதே போல ஒன்று வாங்கித்தருகின்றேன் என தந்தை சொன்னபின் தான் சமாதானம் ஆனேன். மறு நாளே அதேபோல ஒன்றை வாங்கித்தந்தார் அப்பா.
யாழ்ப்பாணம்
அன்றிலிருந்து பள்ளிவிட்டு வந்தால் எனது தோழன் அந்த மூன்று சில்லு சைக்கிள் தான். 1983 இனக்கலவரம் வெடித்து நாம் உயிரை காப்பாற்ற உடைமைகளை எல்லாம் விட்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தோம்.
அதன் பின் சில வருடங்கள் கழித்து எமது உடைமைகளை அப்பா ஒரு பார ஊர்தியில் கொண்டுவந்து சேர்த்தார்.
அந்த சைக்கிள் தோழனை நீண்ட காலம் கழித்து மீண்டும் பார்த்தேன் ஆனால் அதை ஓட்டும் வயதை நான் கடந்துவிட்டிருந்தேன்.
தம்பி தங்கைகள் ஓடுவதும் ஒரு மூலையில் இருப்பதுமாக அந்த சைக்கிள் எம் வீட்டில் இருந்தது.
Read More – Who is the best serial in the world? |
வளர்ந்த பின் சவுதியில் நின்ற மாமாவிடம் கடிதம் எழுதி ஒரு சைக்கிள் வாங்க பணம் பெற்று வாங்கி ஓடியது இன்னுமோர் நீண்ட கதை.
1991 இல் புலம்பெயர்ந்து 2000 ஆம் ஆண்டு ஊருக்கு போயிருந்தேன். அப்போது முன் இருந்த நிலத்தில் ஒரு தென்னை வைப்பதற்காக பெரும் குழி ஒன்றை தம்பி வெட்டிக்கொண்டிருந்தான் நானும் உதவியாக சேர்ந்து வெட்டினேன் அப்போது கரள் பிடித்த ஒரு இரும்பு தென்பட்டது.
முக்கோண வடிவில் வெளிவந்த அந்த இரும்பு குழாய். என் பால்ய தோழனின் எழும்புகூடு என நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா. இப்படி ஆரம்பித்த எனக்கும் சைக்கிளுக்குமான உறவு.
இன்றுவரை தீராக்காதலாய் 5 சைக்கிள் வைத்திருக்கும் அளவுக்கு நீண்டு செல்கின்றது.
100km வரை சைக்கிள் ஓட்டுவது சாதாரணமாக போகும் அளவுக்கு சைக்கிள் வாழ்வோடு நீக்கமற நிலைத்துவிட்டது.
மெய்யழகன் மீண்டும் பால்யத்தை அசைபோட வைத்துவிட்டது.
+ There are no comments
Add yours